Friday, December 10, 2010

ஜான்சி ராணி லட்சுமிபாய் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு:

லக்ஷ்மி பாயின் கடிதம் - முக்கிய வரலாற்று சான்று:
இந்தியாவின் ஜான்சி பகுதியை ஆட்சி செய்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுனர் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு (1857) முன்பாக, கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத இராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த சுவீகாரத்தை டல்ஹவுசி பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சி ராணி 1857ஆம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.
 
வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் (Lewin Bentham Bowring) என்பவர் சேகரித்த ஆவணங்களில் இந்தக் கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார். லட்சுமிபாயின் வரலாறு அதிகமாகப் பதியப்படாத காரணத்தினால் இக்கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான ஆதாரம் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்

 ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை குறிப்பு:

1828 ஆம் ஆண்டளவில் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. தனது 4 வயதில் தாயை இழந்தார்.

ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 இல் மணிகர்ணிகாவை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை. மணிகர்ணிகா லட்சுமிபாய், ஜான்சியின் ராணியானார். 1851 இல் அவருக்குப் பிறந்த மகன் ( தாமோதர ராவ் ) 4 மாதங்களில் இறந்து போனது.

வீரத்தின் மறு உருவமான லக்ஷ்மிபாய் பிறந்த வருடம் 1834. இவரது வீரதீரச் செயல்கள், மற்றும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போர் போன்றவை இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும், நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக இன்றும் அவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது. சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். இவரது கணவர் ஜான்ஸி ராஜா கங்காதர் ராவ் அவர்களும், ஒரே மகனும் 1853 இல் இறந்த பிறகு, இவரும் ஒரு மகனைத் தத்து எடுத்துக் கொண்டு அவரையே ஆட்சியில் அமர்த்தினார். அப்போதைய ஆங்கிலேய கவர்னர் டல்ஹௌஸி இந்த தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டு ஜான்ஸி நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும், மிகத் துணிச்சலுடனும் போர் புரிந்தார். 1858 ஆம் வருடம், ஜூன் மாதம் 18 ஆம் தேதி, போர்முனையில் காயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார் இந்த வீரப் பெண்மணி.

1853 இல் கங்காதரராவ் உடல்நலமிழந்தார். இதனால் தனது நாட்டின் வாரிசு வேண்டித் தனது தூரத்து உறவினச் சிறுவனான அனந்த ராவ்  என்பவனைத் தத்தெடுத்தார். நவம்பர் 21, 1853 இல் மன்னர் இறந்தார். மன்னர் கங்காதரராவ் மறைந்தபின், அவளது வளர்ப்பு மகன் அனந்தராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினாள் ஜான்சிராணி. "ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம்" என உரிமை கொண்டாடி வந்த பிரித்தானியர் ஜான்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரித்தானியர், அரண்மனையை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்தனர். ஜான்சி ராணியையும் அரண்மனையை விட்டு விரட்டினர். கடைசியில் தனது நாட்டை மீட்க வெள்ளையர்களை எதிர்த்துப் போராடத் துணிந்தாள் லட்சுமிபாய்.

ஜான்சி ராணி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்.

ஜனவரி 1858 இல் பிரித்தானியப் படையினர் (இராணுவம்) ஜான்சியை நோக்கி முன்னேறி இரு வாரங்களில் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் ராணி தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு வெளியேறி 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்த தந்தியா டோப் என்பவனுடன் இணைந்தாள். (இவன் பின்னர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டான்).

 மறைவு

வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சிராணி போரிட்டாள். வெள்ளையர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல் மாண்டாள் ஜான்சி ராணி. பிரித்தானியர் குவாலியரை மூன்று நாட்களின் பின்னர் கைப்பற்றினர்.